வியாழன், 15 ஏப்ரல், 2010

செய்தி சொல்லும் சேதி...

மது ஒழிப்பில் முன்னோடி..!

குடி குடியைக் கெடுக்கும்... இது அரசாங்க மது பானக் கடைகளில் எழுதப்பட்டிருக்கும் வாசகம்.ஆனால் அரசாங்கமே அதனை விற்றுக் கொண்டிருப்பதை தமிழகத்தில் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். கடந்த 13 ம் தேதி தினமலர்.காம் தளத்தில் வந்த செய்தி ஒன்று பலரது புருவங்களையும் உயர்த்த செய்தது. அந்த செய்தி வருமாறு...

மது அருந்தினால் ரூ.1000 அபராதம்: தகவல் கொடுத்தால் ரூ. 500 பரிசு
ஏப்ரல் 13,2010,00:00 IST

பாலமேடு : கிராமத்திற்குள் யாரும் மது அருந்தக்கூடாது என்றும், ஏழை, பணக்காரர் யார் இறந்தாலும் கிராமத்தின் மூலம் அடக்கம் செய்யலாம் என்றும், மதுரை அருகே ஒரு ஊராட்சி முடிவு செய்துள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சரந்தாங்கி, பாறைப்பட்டி இணைந்து சரந்தாங்கி ஊராட்சி உள்ளது. இதன் தலைவராக முத்தையா என்பவர் தொடர்ந்து மூன்று முறை தலைவராக இருந்து வருகிறார். சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருது பெரும் வகையில் யூனியன், மாவட்டம் நிர்வாகம் சார்பில் நிர்மல் புரஷ்கார் விருதுக்கும் பரிந்துரை செய்துள்ளனர். முதல் ஆண்டில், ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதும் ஊராட்சிக் குட்பட்ட பகுதியில் யாரும் திருடக் கூடாது, மீறுபவர்களுக்கு, கிராமம் சார்பில் தண்டனை கொடுக்கப்படும் என தெரிவித்தார். அது கிராம கட்டுப் பாட்டிற்கு சாதகமாக அமைந்தது. இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டதும், ஊருக்குள் போலீஸ் நுழையக்கூடாது, எவ்வித பிரச்னையும் கிராம கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கிராம ஒற்றுமை கிடைக்கும் என அறிவித்தார். இதுவும் நல்ல பலனை தந்தது. மூன்றாவது முறை தேர்வு செய்யப்பட்டதும், முத்தாலம்மன் கோயில் பூசாரி ராஜேந்திரன், ஊராட்சி தலைவர் முத்தையா தலைமையில் மீண்டும் கூட்டம் கூடியது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கிராமத்தில் யாரும் மது அருந்தக்கூடாது, மீறிகுடித்தால், கோயிலில் ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். மது அருந்தியவர் குறித்து யாரேனும் தகவல் கொடுத்தால், அவருக்கு கிராமத்தின் சார்பில் ரூ. ஐநூறு பரிசு வழங்கப்படும். கிராமத்தை சுற்றிலும் நிலத்தடி நீர் பாதிக்கும் வகையில் மணல் அள்ளுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம், மணல் அள்ளுவது குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ஐநூறு ரூபாய் பரிசு. ஊராட்சி பகுதிக்குள் யார் இறந்தாலும் ஏழை பணக்காரர் பாகுபாடு இல்லாமல் கிராமத்தின் சார்பில் இறுதி சடங்கு செய்யப்படும் என தீர்மானம் கொண்டு வந்தனர். நான்கு தினங்களுக்கு முன் முருகேசன் என்பவர் டிராக்டரில் மணல் அள்ளினார். அதை மாயன் என்பவர் தகவல் தெரிவித்தார். மணல் அள்ளியவருக்கு ஆறாயிரம் அபராதமும், தகவல் தந்தவருக்கு ஐநூறு ரூபாய் பரிசு அளித்தனர். ஊராட்சி முடிவுக்கு பின், கிராமத்திற்குள் மது அருந்துவதை பலரும் நிறுத்தி விட்டனர். வெளியூரில் மது அருந்தினால், உறவினர் வீட்டில் தங்கியிருந்து மறு தினம் ஊருக்குள் நுழைவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது குறித்து தலைவர் முத்தையா கூறியதாவது, மது அருந்தி விட்டு ஊருக்குள் அசிங்கமான பேச்சுக்கள், இறப்பு வீட்டில் ஆடம்பரம், கோயில் திருவிழா சமயத்தில் வரி கொடுக்க முடியாமல் திணறும் குடும்பங்கள் இதையெல்லாம் மனதில் வைத்து கிராம கட்டுப்பாட்டு நிபந்தனைகள் கொண்டுவந்தோம். ஊராட்சியின் முடிவுக்கு அனைத்து தரப்பினரும் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர், என்றார். (http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7205&ncat=&archive=1&showfrom=4/13/2010)

இலவசங்களை அள்ளித் தெளித்து விட்டு மக்களுக்கு நன்மை செய்து விட்டதாக அலட்டிக் கொள்ளும் இந்த திமுக அரசாங்கம்... மது ஒழிப்பு நடவடிக்கையை கொண்டு வாருங்கள் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தால்.. மதுக்கடைகளின் மூலமாகத் தான் அரசுக்கு அதிக வருமானம் வருகிறது மதுக் கடைகளை மூடினால் அரசாங்க கஜானாவிற்கு நிதி வரத்துக் குறைந்து போகும் என்ற ரீதியில் வியாக்கியானம் கொடுத்து வருகிறது.
மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்க அரசாங்கத்திற்கு கிடைக்கும் பணம் பொது ஜனங்கள் மதுக் கடைகளில் கொட்டிக் கொடுக்கும் காசுகள் தாம்.ஒரு பக்கம் மக்களுக்கு தன் சொந்த பணத்திலிருந்து நன்மை செய்வது போலக் காண்பித்துக் கொண்டு மக்களின் சட்டைப் பைகளில் கிடக்கும் அற்ப சொற்ப சில்லறைகளை மது விற்பனை வழியாக பிடுங்கிக் கொண்டு அந்த வருமானத்திலிருந்து இலவசங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்றது.
இதன் மூலம் மக்களை இலவசங்களுக்கு அலைபவர்களாக மாற்ற முயற்சி செய்துக் கொண்டிருக்கின்ற இவ் வேளையில் முத்தையா போன்ற தலைவர்களின் இன் நடவடிக்கை பாராட்டுக்குரியது.இஸ்லாமிய நாடுகளில் பின்பற்றப்படும் மது தொடர்பான கொள்கைகளை நமது நாடும் பின்பற்றினால் மட்டுமே மதுவினால் உருவாகும் தீமைகளை ஒழித்துக் கட்ட முடியும்.

அதற்கு பால்மேடு முத்தையா முன்னுரை எழுதி இருக்கிறார். அதனை நமது இந்தியா முழுவதும் கொண்டு செல்ல ஒவ்வொரு இந்தியனும் முயற்சி செய்வோம்.