ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

இனியொரு விதி செய்வோம்....

இன்றைய காலம் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் யுகம் என்று நம்பப்படுகிறது.கணினி,இணையதளத்தின் பயன்பாடு மிக உச்சத்தில் இருப்பதன் மூலம் உலகின் ஒரு மூலையில் நடக்கும் ஒரு சம்பவத்தை வீடியோ,புகைப்படம் வடிவில் செய்தியாக,அடுத்த நொடியிலேயே உலகம் முழுவதற்கும் கொண்டு செல்லும் அளவுக்கு ஊடகங்களின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைத்துள்ளது.
அனால் இதன் மறுபக்கம் கருப்பு நிறம் கொண்டவையாக அமைந்திருக்கிறது.கல்வி,வணிகம்,சமூக மேம்பாட்டு விசயங்களுக்காக இவை பயன்படுத்தப் படுவதை விட ஆபாசம்,வன்முறை போன்றவற்றை ஒருங்கிணைக்கும் 'குற்றங்களின் ஒட்டுமொத முனையமாக'செயல்படுவதை யாராலும் மறுக்க முடியாது.இதில் முக்கிய பங்கு வகிப்பது சினிமா.இந்தியாவைப் பொறுத்த வரை சினிமா என்பது பொழுது போக்கு ஊடகம் என்ற நிலையை தாண்டி,வாழ்வில் அணைத்து நிலையிலும் ஊடுருவி மக்களின் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கிறது.
இந்த சினிமாக் கவர்ச்சி தான் இந்த தேசத்தின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது."கோட்டைக்கு செல்லும் வழி கோடம்பாக்கம்" என்று சொல்லப்படும் அளவுக்கு பிரம்மாண்ட சக்தியாக வளர்ச்சியடைந்திருக்கும் அளவுக்கு,சமூகத்தில் நல்ல மாற்றங்களை இந்த சினிமா துறை உருவாக்கவில்லை.
இன்றைய இளைய தலைமுறை மத்தியில் நாளுக்கு நாள் நற்பண்புகள் குறைந்து வருகிறது.பெற்றோர்களை மதிக்காமை ஆசிரியர்களை அவமதிப்பது என்று தீய பண்புகளின் உறைவிடமாக நமது மாணவ சமூகம் மாறி வருவதை தான் சில நாள்களுக்கு முன்பு சென்னையில் பள்ளி மாணவன் ஒருவன் தனது ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவமும்,இளம் பெண்ணை கல்லூரி மாணவர்கள் நால்வர் கூட்டு பாலியல் வன்புணர்ச்சி செய்த சம்பவமும் உணர்த்துகிறது.
மாணவ சமூகத்திடம் இத்தகைய கலாசார சீரழிவுகளை உருவாக்கி கொண்டிருக்கும் இந்த மாதிரியான கழிசடை சினிமாக்களை அரசு வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல்,அவற்றுக்கு வரிவிலக்கும் அளித்து வருவது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சமூகத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வரவேண்டிய பொறுப்பு அரசுக்கு மிக அதிகமாகவே இருக்கிறது.சினிமாக்காரர்களால் தீர்மானிக்கப் படுகின்ற நமது அரசாங்கங்களிடமிருந்து இத்தகைய ஆரோக்கியமான நடவடிக்கையை நாம் எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.தேர்தல் வரும் காலங்களில் கவர்சிகரமான வாக்குறுதிகளையும்,போலியான முழக்கங்களை நம்பியும்,காந்தி படம் போட்ட நோட்டுக்ககவும்,டாஸ்மாக் பாட்டலுக்காகவும் எமது பொன்னான வாக்குகளை வீணடிக்காமல்,நல்ல மனிதர்களுக்கு வாக்களித்து சமூக மாற்றத்திற்கு வித்திடும் பொறுப்பு குடிமக்களாகிய நம் அனைவருக்கும் இருக்கிறது என்பதை இங்கே நாம் மனதில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.