புதன், 16 டிசம்பர், 2009

மறக்கப்படும் இஸ்லாமிய புத்தாண்டு...

இஸ்லாமிய மாதங்களில் முஹர்ரம் முதல் நாளை இஸ்லாமிய புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த பந்தங்களையும் சொத்து சுகங்களையும் அல்லாஹ்விற்காக துறந்து சொந்த மண்ணை விட்டு பிரிந்து மதீனா நகருக்குப் பிரவேசித்த அந்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமிய புத்தாண்டு தினம் அனுசரிக்கப்படுகிறது.
நபியவர்கள் அனைத்தையும் துறந்து மற்றொரு மண்ணில் தஞ்சம் புக வேண்டிய அவசியம் ஏன் உருவானது? என்பது குறித்து ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்து கொள்ள கடமைப்பட்டிருக்கின்றனர்.
மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை ஆகிய இம்மூன்று தீய குணங்களை தன்னகத்தே குடிகொண்டிருந்த ஒரு காட்டரபி சமூகத்தில் பிறந்து அம்மக்களிடையே மண்டிக்கிடந்த இனவெறி குலவெறி என மனித சமூகத்திற்கு ஒவ்வாத கொள்கைகளை எதிர்த்து ஓரிறை கோட்பாட்டை பரப்புரை செய்ததால் சினங்கொண்ட அம் மக்கா நகரத்து காட்டுமிராண்டிகள் அவரை கொலை செய்யத் துணிந்தனர்.
சத்திய மார்கத்தை இப் புவியெங்கும் பரப்பிட சபதம் கொண்ட அம்மாமனிதர் தமது இலட்சியத்தைக் காக்க நாடு துறந்தார் அம்மாபெரும் தியாகத்தை நினைவு கூறுவது இப்புத்தாண்டு தினத்தின் முக்கிய அம்சமாகும்.
ஆனால் இன்றைய சமூகம் அந்த தினத்தை நபிகளார் செய்த தியாகத்தை மறக்கத்துனிந்து விட்டதோ என அஞ்சக்கூடிய அளவிற்கு இந்த நாளை தெரியாமல் இருந்து வருகின்றனர்.
இந்த அவல நிலையைக் களைந்து முஸ்லிம்களின் தேசிய அடையாளங்களில் ஒன்றான இந்த இஸ்லாமிய புத்தாண்டை நினைவில் கொண்டு நபியவர்களைப் போல நாடு துறக்கும் தியாகம் செய்ய நம்மால் முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் இஸ்லாம் தடுத்திருக்கும் பாவமான காரியங்களிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்வேன் என இந்நாளில் நாமனைவரும் சபதம் கொள்வோமாக.
வாசகர்கள் அனைவருக்கும் இனிய இஸ்லாமிய நல்வாழ்த்துக்கள்.