வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

எகிப்தில் வெற்றி ஊர்வலம்!!!! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு...!

எகிப்து நாட்டினை கடந்த முப்பது ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்கை விரட்டியடித்ததை கொண்டாடும் விதமாக எகிப்தியர்கள் இன்று வெள்ளிக் கிழமை தலைநகர் கெய்ரோவில் ஒன்று திரண்டு வெற்றி ஊர்வலம் நடத்தினர்.
சுமார் பதினெட்டு நாட்கள் நடத்திய அதிபரை வெளியேற கோரி நடத்திய போராட்டத்தின் போது சுமார் 356  பேர்கள்  கொல்லப்பட்டதாகவும்5550 பேர்கள் காயங்கள் அடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறது.

இந்நிலையில் ஹோஸ்னி முபாரக்கை விரட்டப்பட்டதை கொண்டாடும் விதமாக எகிப்தியர்கள் இன்று கெய்ரோவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வெற்றி ஊர்வலம் நடத்தியுள்ளனர். பின்னர் தஹ்ரீர் சதுக்கத்தில் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையினை  பிரபல இஸ்லாமிய அறிஞர் டாக்டர் யூசுப் அல்
 கர்ளாவி நடத்தினார்.  இறுதிவரை பின்வாங்காமல் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற  எகிப்தியர்களை அவர் குத்பா உரையின் போது பாராட்டினார். 
புதிய எகிப்து உருவாகும் வரை போராட்டம் ஓயாது என குத்பா உரையின் போது அறிஞர் அல் கர்ளாவி குறிப்பிட்டார்.
அதிபருக்கெதிராக போராட்டம் நடைபெற்ற வேளையில் கைது செய்யப்பட்டவர்களை ராணுவ அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான முஹம்மது வகீத் கூறியிருக்கிறார் என்று அல் ஜசீரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருக்கிறது.